railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building
சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் தமிழரசன் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகளை சந்திக்க முயற்சித்தும் பலன் இல்லாததால் கட்டிடத்தின் 7-வது மாடிக்கு சென்றார். அவரது கையில் ஒரு சிகப்பு நிற பேக்குடன் சென்றார். அதில் இரண்டு பாட்டில்களை வைத்திருந்தார். அதில் ஒன்றில் பெட்ரோலும், மற்றொன்றில் குடிநீரும் வைத்திருந்தார்.
மாடியின் உச்சியில் பெட்ரோல் பாட்டிலுடனும், சிகரெட் லைட்டருடனும் தமிழரசன்நின்று கொண்டிருப்பதை பார்த்த பயணி ஒருவர், உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மாடியின் உச்சிக்கு சென்றனர். அங்கு தமிழரசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தமிழரசனுக்கும் போலீசாருக்கும் நடந்த பேச்சுவார்த்தையை வேடிக்கை பார்க்க ஏராளமான பொதுமக்களும் கூடிவிட்டனர். ரெயில்வே அலுவலக மாடியில் ரெயில்வே ஊழியர்களும் கூடினர். போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மதிய உணவுக்கு கூட செல்லாமல் அவரை காப்பாற்றும் முயற்சியில் முனைப்புடன் இருந்தனர்.
இறுதியாக போலீசார் அவரது வேலைக்கான பத்திரம் என்று கூறி ஒரு கடிதத்தை அவரிடம் காட்டினர். இதனையடுத்து மாலை 4.20 மணிக்கு (5 மணி நேரத்துக்குபின்) அவர் தனது போராட்டத்தை கைவிடுவதாக கூறினார். உடனே காவல்துறையினர் அவரை அலேக்காக தூக்கி மாடியிலிருந்து கீழே இறக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையே அதிக பதட்டமடைந்த தமிழரசனின் மனைவி மயக்கமடைந்தார். உடனே அங்கேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தமிழரசனை மீட்டு சென்னை துறைமுகம் மிதக்கும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஜெயிலில் அடைக்கப்படுவாரா? அல்லது எச்சரித்து அனுப்பப்படுவாரா? என்று விசாரணை முடிவில் தான் தெரியும் என்று வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.