terrorist attack suspected in tamilnadu
தீவிரவாதிகள் மதுரையை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாச வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இது தொடர்பாக அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தானின் சதிச் செயல் அம்பலமானது.
அதன் பிறகும் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. தற்போது தீவிரவாதிகளின் பார்வை தென் இந்தியா மீது விழுந்துள்ளதாக உளவுத்துறைக்கு நம்ப தகுந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன் காஷ்மீர், குஜராத், மும்பை வழியாகவும் வங்காளதேசம், நோபளம் வழியாகவும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவச் செய்தது. இந்த முறை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் அல்லது கேரளாவுக்குள் ஊடுருவல் நடைபெறலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஏற்கனவே சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் சுதந்திர தினம் முடிவடைந்தது. அதன் பிறகு தற்போது புதிதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை கவனிக்கும் இணை இயக்குனர் இந்த மாத மத்தியில் இந்த எச்சரிக்கையை அனுப்பி உள்ளார். அவர் தீவிரவாதிகளின் நாசவேலை திட்டம் பற்றிய 9 பக்க எச்சரிக்கை குறிப்பை அனுப்பி உள்ளார். அதில் இந்த முறை இலங்கை வழியாக தென்இந்தியாவில் தாக்குதல் நடைபெறலாம். குறிப்பாக தமிழ்நாட்டின் மதுரை அல்லது மயிலாடு துறை நகரம் தீவிரவாதிகள் குறியாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.