உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான்.

அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார்.

பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் நிலமாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித் மாணவன் தான் அணிந்திருந்த செருப்பை தலையில் வைத்து நடக்குமாறு தண்டனை கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Related posts