Sagayam, an IAS officer as a special commissioner to probe the mining irregularities
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கனிமவள முறைகேடு குறித்த அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
![Traffic Ramasamy](http://tamilsiragugal.com/wp-content/uploads/2014/11/Traffic-Ramasamy-300x225.jpg)
இது சம்பந்தமாக பிரபல சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாரயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.சோமையாஜி, அந்த அரசாணையைத் தாக்கல் செய்தார். மேலும் அவர், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
![IAS Officer Sagayam](http://tamilsiragugal.com/wp-content/uploads/2014/11/Sagayam-300x150.jpg)
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.இராஜாராமன், சகாயம் நியமனம் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற கனிம முறைகேடுகளை விசாரிக்கும் வகையினில் இல்லை எனவும் வாதிட்டார். இந்த கோரிக்கையை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எழுப்ப இயலாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த கோரிக்கையை மனுதாரர் பிரதான வழக்கு விசாரணையின்போது எடுத்து வைக்கலாம் என அறிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கனிம வள முறைகேட்டை விசாரிப்பது சம்பந்தமாக, சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சகாயம் தலைமையில் 4 நாட்களுக்குள் குழு அமைக்குமாறு, கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி, உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.