விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை

கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவின்ப்படி கொடைக்கானலில் விதிமீறி கட்டிய கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து முடக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 ‘மாஸ்டர் பிளான்’ கட்டுமான வரைமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் 43 கட்டடங்களுக்கு ‘சீல்’ செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் விதிமீறலுக்குட்பட்ட கட்டடங்களின் அறிக்கை நகராட்சியிடம் கோரப்பட்டது. இதில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் 1,415, அவற்றை சீல் வைத்து மார்ச் 11 ம் தேதி அறிக்கையளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஆயத்தமாயினர்.தகவலறிந்த வணிகர் சங்கம் மற்றும் பொதுநலச்சங்கம், பாதிக்கப்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கமிஷனரிடம், ”சீல் வைப்பது குறித்து நோட்டீஸ் வழங்கவில்லை. சீல் வைக்கும் கட்டடங்கள் குறித்து வெள்ளையறிக்கை அளிக்க வேண்டும். விதிமீறலிலுள்ள அரசு கட்டடங்களை சீல் வைத்து விட்டு பொதுமக்கள் மீது நடவடிக்கையை தொடங்குங்கள்,” என வாக்குவாதம் செய்தனர்.கமிஷனர் முருகேசன் கூறுகையில் ” பொதுமக்கள் தொடுத்த வழக்கே தற்போது நடவடிக்கையாக மாறியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற கருத்து கேட்கப்பட்டு, உங்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும், எனினும் நீதிமன்றம் உத்தரவுப்படியே எங்கள் நடவடிக்கை இருக்கும்” என கமிஷனர் முருகேசன் பதிலளித்தார்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில்,’ சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி அவகாசம் அளிக்க வேண்டும். மீறி சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கினால் போராட்டங்கள் நடத்துவோம், என்றனர்.கமிஷனர் அறிவிப்பு இதற்கிடையே நேற்று மாலை நகராட்சி கமிஷனர் முருகேசன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி தற்போது குடியிருப்பு, அரசு கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 300 வணிக நிறுவன கட்டடங்களுக்கு பாரபட்சமின்றி பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும், என்று கூறினார்.

Related posts