கவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி  வியாழன் அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். கவிஞர் வாலி அவர்கள் வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டும்மல்லாமல், இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

50ஆண்டுகள் கடந்து இன்றும் திரையுலகில் பாடல் எழுதுபவர் என்பதினால் வாலிப கவிஞர் வாலி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர். எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம்.

திரையுலகில் அனைவருக்கும் இனியவராக திகழ்பவர் வாலி. காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

Related posts